×

திருச்சி ஜங்ஷனில் முன்பதிவில்லா டிக்கெட் மையம் மூடல் ரயில் பயணிகள் கடும் அவதி

திருச்சி, அக்.10:  திருச்சி ஜங்ஷனில் முன்பதிவில்லா மையங்கள் மூடப்பட்டதால் ரயில் பயணிகள் கடும் அவதியடைந்தனர். திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் முன்பதிவில்லா டிக்கெட் வினியோக மையம் தனியாக இயங்கி வந்தது. இதில் 8 கவுன்ட்டர்களில் டிக்கெட் வினியோகிக்கப்பட்டு வந்தது. பின்னர் கணினி பழுது, ஊழியர்கள் பற்றாக்குறை என 3 கவுன்ட்டர்களை மூடினர். தானியங்கி டிக்கெட் இயந்திரம், செல்போனில் செயலி மூலம் முன்பதிவில்லா டிக்கெட் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்ட பின் மேலும் ஓரிரு கவுன்ட்டர்களை மூடினர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை 2 கவுன்ட்டர்களில் முன்பதிவில்லா டிக்கெட் வினியோகிக் கப்பட்டு வந்தது.

இந்நிலையில் முன்பதிவில்லா டிக்கெட் வினியோக மையம் முழுவதுமாக மூடப்பட்டு விட்டது. மாற்றுத்திறனாளி பயணிகளுக்கு மட்டும் ஒரு கவுன்ட்டர் தனியாக இயங்கி வருகிறது. இதற்கான அறிவிப்பை அதிகாரிகள் ஒரு தாளில் எழுதி ஒட்டி வைத்துள்ளனர். முன்பதிவில்லா டிக்கெட் மையம் மூடப்பட்டதால் முன்பதிவு மையத்தில் உள்ள கவுன்ட்டர் களில் முன்பதிவில்லா டிக்கெட் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதில் முன்பதிவு டிக்கெட் பெறுபவர்களும், முன்பதிவில்லா டிக்கெட் பெறுபவர்களும் வரிசையில் நின்று டிக்கெட் வாங்க வேண்டி உள்ளது. இதனால் காலதாமதம் ஏற்படுவதோடு ரயிலை தவறவிடுகிற நிலை ஏற்படுகிறது. மேலும் முன்பதிவு டிக்கெட் எடுக்க வரும் பல பயணிகளுக்கு உறுதி செய்யப்பட்ட இருக்கை கிடைக்காமல் போக வாய்ப்பு உள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

ரயில் பயணிகள் கூறுகையில், தொழில்நுட்ப வளர்ச்சியில் செயலி மூலம் முன்பதிவில்லா டிக்கெட் பெறும் வசதியை குறிப்பிட்ட அளவே பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். பெருமளவு பயணிகள் கவுன்ட்டர்களில் டிக்கெட் பெறுவதையே வழக்கமாக கொண்டுள்ளனர். எனவே முன்பதிவில்லா டிக்கெட்டை பயணிகள் சிரமம் இல்லாமல் பெற தனி கவுன்ட்டர்களை ஒதுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். திருச்சி ஜங்ஷன் ரயில்நிலையத்தை தொடர்ந்து மற்ற ரயில் நிலையங்களிலும் முன் பதிவில்லா டிக்கெட் மையம் மூடப்பட்டு முன்பதிவு மையத்தில் முன்பதிவில்லா டிக்கெட் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற தகவல் பரவி வருகிறது. முதற்கட்டமாக பெரிய சந்திப்பு ரயில் நிலையமான திருச்சி ஜங்ஷனில் இருந்து அதிகாரிகள் சோதனை முயற்சியை தொடங்கி உள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags : Tiruchirapalli ,junction reservation center ,train passengers ,
× RELATED வெள்ளத்தால் ஸ்ரீவைகுண்டத்தில்...